Saturday, 14 May 2016

விடியவிடிய பணப்பட்டுவாடா .........பறக்கும்படை .....அப்டீனா ???????????

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வினர் நேற்று இரவில் வீடு தோறும் பணப்பட்டுவாடாவை முடித்துக்கொண்டனர். ஆங்காங்கே தள்ளு முள்ளு, புகார் சம்பவங்கள் நடந்தாலும் தேர்தல் ஆணையமோ, பறக்கும்படை அதிகாரிகளோ கையாலாக நிலையில் இருந்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த இரண்டு தினங்களாக ஓட்டுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறது. 12ம் தேதி பகலில் நெல்லையில் முதல்வர் ஜெ.,பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு மேலிடத்தில் இருந்து பணம் பட்டுவாடா குறித்த சமிக்ஞைகள் வந்துவிட்டன.

12ம் தேதி இரவிலேயே அனேக இடங்களில் பணப்புழக்கம் வந்துவிட்டது. தி.மு.க.,வினர் 200 ரூபாய் கொடுத்தார்கள் என்றால், அ.தி.மு.க.,வினர் தாராளமான 500 ரூபாய் கொடுத்தனர். நெல்லை அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரத்தில் அதிகாலையில் வீடு வீடாக பணம் விநியோகித்த 19 வட்ட அ.தி.மு.க.,செயலாளர் பாலச்சந்திரனை, தி.மு.க.,வினர் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து 9 ஆயிரத்து 600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டையில் அ.தி.மு.க., தேர்தல் காரியாலயத்திற்கு வந்த மூன்று ஆம்புலன்ஸ்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் இறங்குவதாக தி.மு.க.,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஒன்றரை மணிநேரம் தாதமாக வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை அலுவலகத்திற்கு சோதனை நடத்த அ.தி.மு.க.,வினர் அனுமதிக்கவில்லை. தி.மு.க.,மறியல் போராட்டம் நடத்திபார்த்தனர்.

தேர்தல் அதிகாரிகளும் நாங்கள் தனியாக எதுவும் செய்யமுடியாது, வருமானவரித்துறை அதிகாரிகள் வரவேண்டும் என்றார்கள். அலுவலகத்திற்குள் ஆம்புலன்ஸ் வேன்கள் நிற்பதை படம் பிடித்த பத்திரிகையாளர்களின் காமிராக்களை அ.தி.மு.க.,வினர் பறித்துக்கொண்டனர். அப்புறம் அங்கிருந்து சர்..சர்ரென கார்கள் வெளியே கிளம்பிச்சென்ற பிறகு தேர்தல் அதிகாரிகள் வெறும் அலுவலகத்தை சோதனை நடத்தினர். சாரிண்ணே..தம்பிக்கு நீங்கள் எந்த பத்திரிகைன்னு தெரியாது..விட்டுருங்க ப்ளீஸ்..என கூறி பறிக்கப்பட்ட காமிராக்கள் பத்திரமாக திருபு்பிதரப்பட்டது. ஆனால் ஒன்றரை மணிநேரத்தில் காரியங்கள் கனகச்சிதமாக முடிந்தது. விடிய விடிய பட்டுவாடா..! திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களிலும், நகரப்பகுதிகளிலும் கூட இரவோடு இரவாக அந்தந்த பகுதி அ.தி.மு.க.,வினர் களம் இறங்கி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர்.

பணம் கொடுப்பது மிகுந்த சிரமமான காரியமெல்லாம் இல்லை. ஏனெனில் பெரும்பாலான கிராமங்களில் ஊராட்சி தலைவர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக அ.தி.மு.க.,வினர்தான் உள்ளனர். ஒரு கிராமத்தில் 2 ஆயிரம் ஓட்டுகள் இருபு்பதாக கணக்கிட்டால், ஆயுிரம் பேர் பெண்கள்.. அதில் 400 பேராவது மகாத்மா காந்தி கிராமப்புற நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளனர். இந்த திட்டத்திற்கான சம்பள பணத்தை ஊராட்சி தலைவரோ, செயலரோதான் வழங்குகின்றனர். எனவே அவர்கள் ஊதியத்தோடு தேர்தல் கவனிப்பையும் சேர்த்து வழங்கினர். மீதமுள்ள 400 பெண்கள் ஏதாவது சுயஉதவி குழுக்களில் உள்ளனர். இந்த இரண்டு தரப்பு பெண்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைப்பதும், பணம் கொடுப்பதும் தற்போது மிகவும் எளிதாகிவிட்டது. எனவே 2 ஆயிரம் ஓட்டுக்களில் 200 ஓட்டுகள் வேண்டுமானால் விடுபட வாய்ப்புள்ளதே தவிர 80 சதவீதம் பேரை ‛கவர்ந்து' விடலாம். சலூன்கடையில் சிக்கிய பணம்..!

நெல்லை வண்ணார்பேட்டையில் பட்டப்பகலில் அ.தி.மு.க.,வினர் பணம் வழங்கிக்கொண்டிருந்தனர். அங்கு திடீரென தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து வந்தனர். இதனை பார்த்த அ.தி.மு.க.,வினர் சர்வசாதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் நோட்டு கட்டினை போகிறவழியில் ஒரு சிறிய முடிதிருத்தும் கடைக்குள் தூக்கிபோட்டுவிட்டுசென்றனர். துரத்தி வந்த அதிகாரிகள் அந்த சலூனில் சோதனை நடத்தி ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அப்பாவியான முடிதிருத்தும் தொழிலாளி முருகன் கைது செய்யப்பட்டார்.

யாரோ தூக்கிப்போட்ட கரன்சிக்காக உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தினாலும் சரி, இனி ஒரு மாதத்திற்கு வெயிலில் அலைந்து தேர்தல் பிரசாரம் நடத்துவதெல்லாம் வீண்..தேர்தலுக்கு முந்தைய மூன்று தினங்கள்தான் ஒரு மாநிலத்தின் தலைவிதியையே நிர்ணயிப்பதாக உள்ளது. தி.மு.க.,திருமங்கலத்தில் அறிமுகப்படுத்திய பார்முலாவை, கடந்த பார்லிமென்ட் தேர்தலைப்போல இந்த சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.,கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டது. எனவே தேர்தல் பிரச்சாரங்கள் தூள் தூள்.. தொலைக்காட்சி நேரலை விவாதங்கள் தூள் தூள்..தேர்தலுக்கு முந்தைய மூன்று தினங்கள்தான் ஜாம்..ஜாம்..என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

தினமலர்.com

No comments:

Post a Comment